🌷ஸ்ரீ கள்ளழகர்🌷 🌻ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி🌻

💥உறவுச் சண்டை தீர்க்கும் அழகர்கோவில் சம்பா தோசை!💥

💮சின்னஞ்சிறு பள்ளிக் குழந்தைகளுக்கிடையில் சண்டை ஏற்பட்டால், உடனே மறந்து பழையபடி நட்பாகிவிடுவார்கள்.🏵

🌸ஆனால், வளர்ந்தவர்கள் சண்டை போட்டுப் பிரிந்துவிட்டால், அவர்கள் மறுபடியும் ஒன்றுசேருவது சற்றுக் கடினம். 🌸

🍀குடும்பத்தில், உறவினர்களுக்கிடையில், நண்பர்களுக்கிடையில் ஏதோ ஒரு காரணத்துக்காகச் சண்டை வந்து, சம்பந்தப்பட்டவர்கள் மனவருத்தத்துடன் பிரிந்துவிடுவது உண்டு.🍀

அப்படிச் சண்டை போட்டுப் பிரிந்தவர்கள் மறுபடியும் அன்புப் பிணைப்போடு ஒன்று சேருவதற்கென்றே ஒரு கோயில் இருக்கிறது.

மதுரை அழகர்கோவில்தான், அந்தக் கோயில்.

சண்டை போட்டுப் பிரிந்தவர்கள் அழகர்கோவிலுக்கு வந்து, அங்கே மட்டுமே பிரத்யேகமாகக் கிடைக்கும் சம்பா தோசையை வாங்கிச் சாப்பிட்டால், பங்காளிச் சண்டை, மாமன்-மச்சான் சண்டை, கிராமங்களுக்கு இடையிலான சண்டை, நண்பர்களுடனான சண்டை அனைத்தும் தீர்ந்து, அன்பும் உறவும் பலம் பெறுவதாக மதுரை சுற்றுவட்டார கிராம மக்களிடம் ஒரு நம்பிக்கை இன்றும் நிலவுகிறது.

இதைப் பற்றித் தெரிந்துகொள்ள, மதுரை அழகர்கோவிலுக்கு நேரில் சென்றோம்.

கோயிலுக்கு வந்திருந்த பக்தர் சேவுகமூர்த்தி என்பவரிடம் பேசினோம்.

``சண்டை போட்டுப் பிரிந்தவர்கள் மறுபடியும் ஒன்றுசேர இங்கே வந்து, காவல்தெய்வமான கருப்பனுக்குக் காணிக்கை செலுத்தி, விபூதி வாங்கிக்கொள்ள வேண்டும்.

பிறகு, கள்ளழகர் கோயிலில் உள்ள உண்டியலில் காணிக்கைப் பணத்தைச் செலுத்த வேண்டும்.

தொடர்ந்து மலை மேல் இருக்கும் ராக்காயி அம்மன் கோயிலுக்கு அருகில் இருக்கும் நூபுரகங்கை தீர்த்தத்தில் நீராட வேண்டும்.

கையில் எடுத்துச் செல்லும் சொம்பில் கொஞ்சம் தீர்த்தமும் எடுத்துக்கொண்டு, மீண்டும் கருப்பசாமி கோட்டை வாசலுக்கு வந்துவிட வேண்டும்.

கோயில் பிராகாரத்தில் உட்கார்ந்துகொண்டு, இரு தரப்பினரும், `உங்களுக்கும் எனக்கும் எந்தப் பகையும் இல்லை. அப்படிப் பகையோ வெறுப்போ இருந்தால், அதைக் கருப்பனும் அழகர்மலையானும் எடுத்துவிடுவார்கள்.

இது சத்தியம், சத்தியம்…’ என்று தீர்த்தச் சொம்பின் மீது மூன்று முறை சத்தியம் செய்துகொள்ள வேண்டும். பிறகு, சொம்பில் கொண்டுவந்த தீர்த்தத்தை ஒருவர்மீது மற்றவர் தெளித்துக் கொள்ள வேண்டும்.

சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட பிறகு, கோயிலில் கிடைக்கும் சம்பா தோசையை வாங்கி, இரண்டு தரப்பினரும் சாப்பிட வேண்டும்.

இதன்மூலம் சண்டை, வெறுப்பு, கோபம் எல்லாமே நீங்கிவிடும் என்று பாரம்பர்யமாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

மேலும், இப்படிச் செய்தால் சண்டைக்குப் பிறகு எதிர்த்தரப்பினரை நாம் திட்டியது, காசு வெட்டிப் போட்டது, மண்ணை வாரித் தூற்றியது போன்ற எல்லாமே நீங்கிவிடுவதாகவும் நம்புகிறார்கள். இதன்மூலம் பிரிந்த பல உறவுகள் மீண்டும் சேரமுடியும்'' என்று கூறினார் சேவுகமூர்த்தி.

சண்டைகளைத் தீர்த்து ஒன்று சேர்க்கும் சம்பா தோசை அழகர்கோவில் வளாகத்திலேயே செய்வதாகத் தெரியவர, உள்ளே சென்று, சம்பா தோசையைத் தயார் செய்துகொண்டிருந்த கணேசனிடம் பேசினோம்.

சம்பா தோசையின் மகிமையைப் பற்றி நம்மிடம் விளக்கமாகப் பேசுகிறார் கணேசன்.

``நான் 37 வருஷமா இந்த சம்பா தோசையைச் சுடும் திருப்பணியைச் செஞ்சுக்கிட்டு இருக்கேன்.

அழகர் மலை யானையும், துடியான காவல் தெய்வமான கருப்பனையும் வணங்கிட்டுதான் வேலையை ஆரம்பிப்பேன்.

பச்சரிசி, தொலி உளுந்து, சீரகம், பெருங்காயம், சுக்கு, கறிவேப்பிலை எல்லாத்தையும் சேர்த்து அரைச்சு, அத்துடன் நூபுர கங்கை தீர்த்தத்தையும் கலந்து நெய் விட்டுச் செய்யறதுதான் சம்பா தோசை.

ஒரு சம்பா தோசை 40 ரூபாய்க்குக் கோயில்ல விற்கப்படுது. இந்தக் கோயில் தோசை வேற எங்கேயும் விற்கப்படுவதில்லை.

சண்டை போட்டுப் பிரிந்தவர்கள்தான் சம்பா தோசையைச் சாப்பிடணும்கிற தில்லை. எல்லோருமே சாப்பிடலாம்.

சண்டை போட்டுப் பிரிந்தவர்கள் மட்டுமில்லாம, விவசாயம் செழிக்க வும் சம்பா தோசையை வாங்கிட்டுப் போறாங்க.

நெல், கரும்பு, கடலை போன்ற பயிர்களை அறுவடை செய்யும்போது, நிறைய லாபம் கிடைக்கணும்னு வேண்டிக்கிட்டு இந்தத் தோசையை வாங்கிட்டுப் போவாங்க.

அறுவடை நடக்கும்போது எல்லாருக்கும் விபூதி பூசி, இந்தத் தோசையைச் சின்னச் சின்னத் துண்டுகளாக்கிக் கொடுப்பாங்க. இதனால விவசாயத்துல நல்ல லாபம் கிடைக்கும்கிறது பக்தர்களோட நம்பிக்கை.''

``இந்தத் தோசைக்கு சம்பா தோசை என்று எப்படிப் பெயர் வந்தது?'' என்று கேட்டோம்.

``அந்தக் காலத்துல நிறைய பேர் சம்பா நெல்லைப் பயிர் செஞ்சாங்க. அறுவடை முடிஞ்சதும், ஒரு மரக்கா சம்பா நெல்லைக் கொண்டாந்து கோயிலுக்குக் காணிக்கையா கொடுத்துடுவாங்க.

அந்த நெல்லை கைக்குத்தா குத்தி அரிசியாக்கி, அந்த அரிசியில தோசை செய்வாங்க. அதனாலதான் இதுக்்கு `சம்பா தோசை'னு பேரு வந்ததாச் சொல்றாங்க.

இப்ப அவ்வளவா யாரும் சம்பா நெல்லைப் பயிரிடறது இல்லைன்னாலும், அந்தப் பேரே நிலைச்சிடுச்சு'' என்கிறார் கணேசன்.

இந்த உலகத்தில் அன்புதான் பிரதானம். `அன்பே கடவுள்’ என்று சொல்வதும் அதனால்தான்.

சந்தர்ப்பச் சூழ்நிலையால் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுப் பிரிந்தாலும், அன்பின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டு, பகைமை மறந்து மறுபடியும் இணைய இப்படி ஒரு வழி அழகர்மலையில் இருக்கிறது.

எனவே, பகைமை உணர்வும் கசப்பு உணர்வும் கொண்டு பிரிந்தவர்கள் இங்கே சென்று சம்பா தோசை பிரசாதம் சாப்பிட்டு, அன்பு வளர்க்கலாம்… நட்புகொள்ளலாம்.

இதற்கு, மூலம் எதுவென்ற ஆராய்ச்சியில் இறங்காமல், பகைமை மறைய நம் முன்னோர்கள் பின்பற்றிய இந்த நடைமுறையை நாம் நல்லதொரு விஷயமாகவே போற்றலாமே!

🌷வாழ்க வளமுடன் 🌷

💥என்றும் இறைபணியில்💥

காவல் தெய்வம் 
    கருப்பசாமி 
   சேவா சங்கம் 

G சண்முகவேல் அலங்காநல்லூர்!

Cheers,
RM…
Raghavan alias Saravanan Muthu
28 Dec 2021 | Tue | 18:05:12 PM IST